விஜய் முதல்வராகப் பதவியேற்க திருமாவளவன் ஆதரவா?
தனிப்பெரும் கட்சியான தவெகவின் விஜய் முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்
தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது, "அமித் ஷாவும் மோடியும் தமிழக அரசியலுக்குள் தலையிட்டு, குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். தனிப்பெரும் கட்சியாக மக்களால் தவெக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. எனவே அவரை (விஜய்) பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அதுதான் அரசியலமைப்புச் சட்டம் காட்டுகிற வழிகாட்டுதல்.
அவர் ஆதரவுகோரிய நிலையில், இன்னும் அதுதொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காமல், இங்கே குழப்பம் உருவாவதற்கு இடமளிக்கின்றனர். இது ஏற்புடையதல்ல.
Advertisement
தவெகவுக்கு ஆதரவளிக்கக் கூடியவர்களின் பட்டியலை ஆளுநர் கோர முடியாது. அவருக்கு தனிப்பெரும்பான்மை இருக்கிறதா என்பதை சட்டப்பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும். அதனை நிரூபிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
அதனை விடுத்து, காலந்தாழ்த்துவதன் மூலம் பாஜக தலையீடு செய்து, குழப்பத்தை ஏற்படுத்துகிற ஐயத்தை உருவாக்கியிருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.
எங்களைப் பொறுத்தவரையில், மக்கள் அளித்த தீர்ப்பின்படி, விஜய் முதல்வராகப் பதவியேற்பதுதான் சரி. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம்.
தவெகவை பாஜக கையாளுகிறது என்பதுதான் தொடக்கத்திலிருந்து எனது கருத்து. இப்போதும் அவரைக் கையாளவும் கட்டுப்படுத்தவும் பாஜக முயற்சிக்கிறது. அவரைக் கட்டுக்குள் வைத்திருக்க நெருக்கடிகளைத் தருகிறது.
பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அவரைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது, காங்கிரஸுடனும் இடதுசாரிகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும், ஆட்சியமைக்க விரும்புவதாகவும் விஜய் சொல்லியிருப்பதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
இதிலுள்ள நல்லது - கெட்டது, நிறை - குறை, எதிர்கால அரசியல் போக்குகள் உள்ளிட்டவற்றை பரிசீலிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம். இதுகுறித்த ஒரு முன்கூட்டிய ஒரு முடிவை நான் அறிவிக்க முடியாது.
விஜய்யை கைப்பாவையாக வைத்துக்கொள்ள பாஜக முயற்சிக்கிறது. அதற்கேற்ப ஆளுநரும் செயல்படுவதாகத் தெரிகிறது.
உடனடியாக விஜய்யை பதவியேற்க அனுமதிப்பதுதான் அரசியல் சட்டபூர்வமான கடமை. இதனை ஆளுநர் செய்யவில்லையென்றால், தமிழ்நாட்டு அரசியலை அவர்கள் மேலும் குழப்பப் போவதுதான் பொருள்" என்று தெரிவித்தார்.