பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு வாய்ப்பளிக்க வேண்டும்: ஜம்மு - காஷ்மீர் முதல்வர் கோரிக்கை!
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக தலைவர் விஜய்க்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஓமர் அப்துல்லா கோரிக்கை விடுத்தது தொடர்பாக...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக தலைவர் விஜய்க்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை தவெக தலைவர் விஜய் புதன்கிழமை (மே 6) சந்தித்து உரிமை கோரினார்.
அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று விஜய்யிடம் ஆளுநர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை (மே 7) காலை மீண்டும் தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்த பிறகு, ஆளுநர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, 118 எம்எல்ஏக்களின் பட்டியலை தவெக தலைவர் விஜய் வழங்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் திட்டவட்டமாக மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஓமர் அப்துல்லா, “முன்னாள் பிரதமர் ஏ.பி. வாஜ்பாய் 13 நாள்களுக்கு அரசாங்கத்தை அமைத்தபோது இது நடந்தது. அவர் தனது பெரும்பான்மை பலத்தைக் காட்டுவதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் காத்திருக்கவில்லை. குடியரசுத் தலைவர் அவரை அழைத்தார். 13 நாள்களுக்கு அரசாங்கம் நடைபெற்றது. ஆனால் வாஜ்பாயிடம் பெரும்பான்மை பலம் இல்லாதபோது, அவரே ராஜிநாமா செய்தார்.
முதலில் விஜய் ஆட்சியமைக்க அனுமதிக்கப்பட வேண்டும். பின்னர், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் விஜய் பதவியில் தொடர்வார். இல்லையேல், ராஜிநாமா செய்வார்” எனத் தெரிவித்தார்.