முதல்வர் பதவியேற்பு விழா: நேரு விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பு!
நேரு விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறித்து...
தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில், நேரு விளையாட்டு அரங்கில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பெரும்பான்மைக்கு 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதையடுத்து, காங்கிரஸ், இடதுசாரிகள் ஏற்கெனவே தங்களது ஆதரவை தெரிவித்த சூழலில், பெரும்பான்மையை அடைய மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. இச்சூழலில் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் சனிக்கிழமை ஆதரவு கடிதத்தை வழங்கின. இதன்மூலம், தவெகவுக்கான ஆதரவு எண்ணிக்கை 120-ஆக உயர்ந்தது.
இதையடுத்து தவெக தலைவர் விஜய் தனக்கு ஆதரவு வழங்கிய கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று, தமிழக ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். அதையேற்று ஆளுநரும் தவெக ஆட்சி அமைக்க அனுமதி வழங்கினார்.
Advertisement
இதனையடுத்து, தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (மே 10) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதையொட்டி, முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் தலைமையில் 6000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விஜய் வரும் வழி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.