தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்
இனி வரும் காலங்களில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் முதலில் ஒலிக்கப்படுமா? என்ற கேள்வி எழுவதாக திருமாவளவன் கருத்து...
பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட விவகாரம் குறித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
சென்னை நேரு அரங்கத்தில் இன்று (மே 10) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடலும் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது.
Advertisement
இந்நிலையில், முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் 3வதாக பாடப்பட்டது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து திருமாவளவன் பேசியதாவது:
''முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டு அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதே வழக்கம். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் பாடுவதே நீண்ட கால நடைமுறை. ஆனால், முதல்வர், இடைக்கால சட்டப்பேரவைத் தலைவர் பதவியேற்பில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற அரசியலை விரும்புவோர் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 3வதாக பாடப்பட்டது அதிகாரிகள் கவனக் குறைவால் நிகழ்ந்ததாகக் கருத முடியவில்லை. மாறாக ஆளுநரின் விருப்பப்படியோ ஆளுநரை மகிழ்விக்கவோ செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் ஒலிக்கப்படுமா? என்ற கேள்வி எழும்புகிறது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அல்லது தவெக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்க வேண்டும்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய், கஜானா காலி என்று கூறி அச்சமூட்டுவது ஏற்புடையது அல்ல. தமிழகத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ. 10 லட்சம் கோடி என்பது நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் உள்ளதாக மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்''. என திருமாவளவன் பேசினார்.