கட்சி மேடைகளில்கூட தவிர்க்க வேண்டியதை, பேரவையில் பேசலாமா? திருமாவளவன்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததால், உதயநிதியை கிண்டலடிக்கும் விதமாக சட்டப்பேரவையில் விஜய் பேசியதற்கு திருமாவளவன் கருத்து...
கட்சி மேடைகளில்கூட தவிர்க்க வேண்டியதை சட்டப்பேரவையில் பேசலாமா? என முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஜூன் 24) கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று (ஜூன் 23) உரையாற்றினார். அப்போது குட்டிக் கதை ஒன்றையும் குறிப்பிட்டார்.
''ஒரு ஊருல பெரியவர் ஒருவர் வெய்யில் அதிகமாக இருப்பதாக தெரிவித்து கண்ணில் கைவைத்து தேடிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன், என்ன தேடுறீங்க என்று கேட்க, அந்த பெரியவர், உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க.... அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். எங்க உங்க அப்பாவைக் காணோம்'' என்று கூறி முடித்தார்.
Advertisement
Advertisement
கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததால், உதயநிதியை கிண்டலடிக்கும் விதமாக விஜய் இவ்வாறு பேசியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக திருமாவளவன் பதிவிட்டுள்ளதாவது:
''ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல. கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென முதலமைச்சரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
VCK Thirumavalavan reaction for TN CM vijay speech in assembly about MK Stalin defeat
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.