மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முதல்வர் விஜய்! வரவேற்ற உதயநிதி!!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய்யை உதயநிதி வரவேற்றார்.
முதல்வர் ஜோசப் விஜய், தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய்யை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைகுலக்கி, கட்டியணைத்து வரவேற்றார். ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய், பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தினார்.
அடுத்து, மு.க. ஸ்டாலினும் பொன்னாடைப் போர்த்தி முதல்வர் விஜய்க்கு தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டார். பிறகு முதல்வர் விஜய் - மு.க.ஸ்டாலின் அமர்ந்து சில நிமிடங்கள் பேசினர். மிகச் சில நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நிகழ்ந்தது. உடனடியாக முதல்வர் ஜோசப் விஜய், ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Advertisement
ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்துக்குச் சென்று மு.க. ஸ்டாலின் சந்தித்தப் பிறகு மூத்த அரசியல் தலைவர்களையும் விஜய் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
மு.க. ஸ்டாலினைத் தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலர் வைகோவையும் முதல்வர் விஜய் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், மரியாதை நிமித்தமாக மு.க. ஸ்டாலினை சந்திக்க வருகை தந்ததாகக் கூறப்படுகிறது. பிரசாரத்தின் போது ஸ்டாலின் சார் என கடுமையாக விமரிசித்துப் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், இந்த சந்திப்பின்போது எவ்வாறு பேசுவார், முன்னாள் முதல்வர் மு.க, ஸ்டாலினும், முதல்வர் விஜய்யும் என்ன பேசுவார்கள் என்பது தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.
முதல்வர் விஜய் வருகையால் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அன்பில் மகேஸ், எழிலன் நாகநாதன் உள்ளிட்டோரும் ஸ்டாலின் இல்லத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பானது, மிக எளிமையாக நடந்து முடிந்தது.