முகப்பு
தமிழ்நாடு

மந்திரி பதவிக்காக த.வெ.க.விடம் மண்டியிட்டு... சி.வி. சண்முகம் தரப்புக்கு எதிராக அதிமுக அறிக்கை!

சி.வி. சண்முகம் தரப்புக்கு எதிராக அதிமுக தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கை பற்றி...

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தரப்புக்கு எதிராக அதிமுக சமூக ஊடகப் பக்கத்தில் காட்டமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ளது. சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாக இடைக்கால சட்டப்பேரவைத் தலைவரிடம் திங்கள்கிழமை கடிதம் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சி.வி. சண்முகம், அதிமுக யாருடனும் தற்போது கூட்டணியில் இல்லை, மக்கள் தேர்ந்தெடுத்துள்ள தவெக ஆட்சிக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது என அறிவித்தார்.

Advertisement

இந்த நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது:

“சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது.

திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?

அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?

அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?

பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?

கட்சி யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?

1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கட்சிக்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!

அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?

நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்! எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்! எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!

இந்த இயக்கம் சில சட்டப்பேரவை உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.

இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Groveling before the TVK for a Ministerial Post... AIADMK Issues Statement Against C.V. Shanmugam's Faction!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.