முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய கோரிக்கை!
அறிவியல் கண்ணோட்டமும், பகுத்தறிவு சிந்தனையும் வளர்த்து, வலிமைப்படுத்த வேண்டியது அரசின் கடமை...
முதலமைச்சர் அரசியல் பிரிவு அலுவலர் நியமனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''நாடறிந்த பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிப்பது வியப்பளிக்கிறது.
Advertisement
தமிழக வெற்றிக் கழகம், தனது முகப்பு பதாகையில் மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” குறட்பாவை கொள்கை நிலையாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஆன்மீக வழியில்லாமல் கடவுள் மீதும், வழிபாடுகள் மீதும் நம்பிக்கை கொண்டவராக இருக்கலாம். அது, அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறையாகும்.
ஆனால், மதச்சார்பின்மை பண்புகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அரசு எந்த மதச்சார்பு அடையாளத்தையும் கொண்டிருக்கக் கூடாது என்பது நாடு பின்பற்றி வரும் மரபாகும்.
அறிவியல் கண்ணோட்டமும், பகுத்தறிவு சிந்தனையும் வளர்த்து, வலிமைப்படுத்த வேண்டிய அரசு, முதலமைச்சரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ஒருவரை நியமித்திருப்பது சரியல்ல.
இது பொதுமக்களிடம் தவறான நம்பிக்கைகளை ஊக்கப்படுத்துவதாவே அமையும் என்பதால், ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம், மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகமும் தெரிவித்துள்ளார்.
இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.