தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?
விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்து...
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
நாளை பேரவை தொடங்கியவுடன் பெரும்பான்மை நிரூபிப்பதற்கான தொடக்க உரையில் முதல்வர் விஜய் பேசுவார். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான (108) இடங்களை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியது. எனினும் ஆட்சி அமைக்க 118 என்ற எண்ணிக்கை தேவை என்பதால், மற்ற கட்சிகளில் ஆதரவை நாடியது.
Advertisement
பின்னர் காங்கிரஸ் (5), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), மார்க்சிய கம்யூனிஸ்ட் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளுன் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
இதனைத் தொடர்ந்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். உடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். 17 வது சட்டப்பேரவை நேற்று முன்தினம் கூடிய நிலையில், நேற்று எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்.
சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர், துணைத் தலைவர் ரவி சங்கர், கொறடாவாக சபரிநாதன் ஆகியோர் இன்று நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்தி, சட்டப்பேரவையில் நாளை விஜய் நம்பிக்கை தீர்மானத்தின் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளனர். இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சரிபாதிக்கு மேல் வாக்களிக்க வேண்டும். குரல் வாக்கெடுப்பு மூலமாகவோ, அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலமாகவோ வாக்கெடுப்பு நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.