நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு!
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெக 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், தனித்து ஆட்சி அமைக்கும் அறுதிப் பெரும்பான்மை பலமான 118- உறுப்பினா்களின் ஆதரவு இல்லாத நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக விஜய் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றாா். அவரது அமைச்சரவையில் 9 அமைச்சா்களும் பதவியேற்றனா்.
மே 13-ஆம் தேதிக்குள் பேரவையில் முதல்வா் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) காலை தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
Advertisement
தவெக அரசின் மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. செல்லசுவாமி, விசிக எம்.எல்.ஏ. வன்னியரசு, ஐயுஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான், சிபிஐ எம்.எல்.ஏ. தளி ராமசந்திரன் உள்ளிட்டோர் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ.வும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தார்.
பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன், பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி உள்ளிட்டோர் வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கப் போவதாக தெரிவித்தனர்.
தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த், மஜக எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர்.
தவெக அரசைக் கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை அவைக் கதவுகள் மூடப்பட்டு, பகுதிவாரியாக ஆறு பிரிவுகளாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் பதிவாகின. நடுநிலை வகிப்பதாக 5 வாக்குகள் பதிவாகின.
தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.