முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் பேச்சு...
தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக சட்டப்பேரவையில் அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் உரையாற்றி வருகின்றனர்.
Advertisement
அப்போது அமமுக காமராஜ் பேசியதாவது:
”முதல்வராக பொறுப்பேற்றவுடன் நீங்கள் கையெழுத்திட்ட மூன்று அறிவிப்புகளும் தமிழ்நாட்டுக்கு உதவும் திட்டங்கள். கடந்த மூன்று நாள்களாக சென்னையில் இருக்கிறேன். சென்னை இவ்வளவு தூய்மையாக இருப்பதையும், காவல்துறையின் செயல்பாட்டையும் கண்டு வியப்படைந்தேன்.
நீங்கள் நல்லாட்சி தர வேண்டும். 5 ஆண்டுகால சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும். 50 ஆண்டுகால ஆட்சிக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் இளைஞர்களும் நாங்களும் உங்களை நம்புகிறோம். முதல் அறிவிப்பில் இலவச அறிவிப்பை வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், உண்மையாக மக்களுக்கு உதவுகின்ற திட்டங்களை அறிவித்த உங்களை நான் பாராட்டுகிறேன். உங்கள் அரசு தொடர்வதற்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, அமமுக எம்எல்ஏ காமராஜிடம் தவெக குதிரை பேரம் பேசியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, தவெக தரப்பில் காமராஜ் ஆதரவு அளிக்கும் கடிதத்தில் கையெழுத்திட்ட விடியோ வெளியிடப்பட்ட நிலையில், அது செய்யறிவு விடியோ என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.