தமிழ்நாட்டை காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா? எம்.எல்.ஏ. காமராஜ்
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு காமராஜ் ஆதரவு தெரிவித்திருப்பது பற்றி...
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் என்னை காப்பாற்றுவார் என்று அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இன்று காலை முன்மொழியப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் பேசியதாவது:
Advertisement
“தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் தவெக அரசுக்கு நேற்றும் ஆதரவு தெரிவித்தேன், இன்றும் தெரிவிக்கிறேன், நாளையும் தெரிவிப்பேன். 5 ஆண்டுகாலமும் தவெக அரசுக்கு ஆதரவாக இருப்பேன்.
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்துக்காக ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளேன். தமிழ்நாடு மக்கள் அனைவரையும் காப்பாற்றும் முதல்வர் விஜய், என்னை காப்பாற்ற மாட்டாரா?
முதல்வராக விஜய் பதவியேற்ற 4 நாள்களில் திருச்சியில் ஒரே நாளில் 300 ரெளடிகள் சரணடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் புழக்கம், கட்டப் பஞ்சாயத்து, ரெளடிகள் அட்டூழியம் அனைத்தும் அழிந்துவிட்டது.” எனக் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜை நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று உத்தரவிட்டிருந்தார்.