தவெகவுக்கு அதிமுக ஆதரவு! பதவிக்கு ஆசைப்படவில்லை! எஸ்.பி. வேலுமணி
தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக எஸ்.பி. வேலுமணி பேசியது பற்றி...
தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக எஸ்.பி. வேலுமணி பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் இன்று(மே 13) காலை முன்மொழியப்பட்ட நிலையில், அதன் மீது பேரவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியில் இருந்து பிரிந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் அறிவிக்க, முதல்வர் விஜய்யும் நேற்று அவர்களைச் சந்தித்து ஆதரவை உறுதிப்படுத்தினார்.
Advertisement
அப்போது எஸ்.பி. வேலுமணி பேசுகையில்,
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்களின் உணர்வுகளை, எண்ணங்களை மதித்து முதல்வர் விஜய் கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளிக்கிறது. ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் கிடையாது. மக்கள் தீர்ப்பை மதித்து நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். திமுகவை எதிர்த்துதான் இதுவரை அரசியல் செய்திருக்கிறோம்.
பெரும்பான்மை மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தவெகவுக்கு எதிராக பேசினார். பின்னர் எஸ்.பி. வேலுமணி பேசத் தொடங்கியபோது அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவைத் தலைவர் அமைதிப்படுத்திய பின்னர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.