சட்டப்படி நிரூபித்த பிறகே தலைமை அலுவலகத்தில் கால் வைப்போம்: சி.வி. சண்முகம்
அதிமுகவின் உண்மையான தொண்டர் என்று சட்டப்படி நிரூபித்த பிறகுதான் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருவேன் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சு
அதிமுகவின் உண்மையான தொண்டர் என்று சட்டப்படி நிரூபித்த பிறகுதான் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருவேன் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
சென்னை எம்ஆர்சி நகரில் செய்தியாளர்களுடன் சி.வி. சண்முகம் பேசியதாவது, "அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் வரவிருப்பதாகக் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
இந்த ரத்தம் அதிமுகவின் ரத்தம். சாதாரண எங்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாவும் பதவிகளைக் கொடுத்து, அழகுபார்த்த இயக்கம் அதிமுக. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம். இந்த இயக்கத்தின் தலைமை அலுவலகத்தை நாங்கள் எங்களின் கோயிலாக மதிக்கிறோம்.
Advertisement
Advertisement
எந்தச் சூழ்நிலையிலும் எந்தக் காரணத்துக்காகவும் எங்கள் கோயிலான தலைமை அலுவலகத்தின் மீது தூசி படுவதற்கோ, எங்களால் சிறிதளவும் பாதிப்பு ஏற்படுவதற்கோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
எந்தச் சூழ்நிலையிலும் எந்தக் காரணத்துக்காகவும் நாங்கள் அங்கே வர மாட்டோம். நாங்கள் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என்பதைச் சட்டப்படி நிரூபித்த பிறகுதான், அங்கே எங்களின் கால் பதியும். ஆகையால், யாரும் அச்சப்பட வேண்டியதில்லை.
எங்களின் கோயிலுக்கு எந்தச் சூழ்நிலையிலும் பாதிப்பு ஏற்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
அதிமுகவில் இரு பிரிவினராக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு தரப்பிலும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி. சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மற்றொரு தரப்பிலும் பிரிந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி. சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைக் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமையில் அறிவித்தார்.
இதனிடையே, அதிமுகவில் இரு தரப்பினரிடையே நிலவிவரும் அரசியல் விவாதங்களால் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என முன்னெச்சரிக்கையாக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், தங்களால் தலைமை அலுவலகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
C.V. Shanmugam states that he will set foot in the AIADMK headquarters only after proving his position legally.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.