விஜய்யின் ஆட்சியால் சினிமாவில் சுதந்திரம் கிடைக்கும்: பேரரசு நம்பிக்கை
முதல்வர் விஜய்யின் ஆட்சியில் சினிமாவில் சுதந்திரம் கிடைக்கும் என இயக்குநர் பேரரசு நம்பிக்கை
முதல்வர் விஜய்யின் ஆட்சியில் சினிமாவில் சுதந்திரம் கிடைக்கும் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
சைலன்ட் இன்ஃப்ளூயன்சர் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசியதாவது, "விஜய், இன்று நம் திரையுலகிலிருந்து கலைக் குடும்பத்திலிருந்து தமிழக முதல்வராகி உள்ளார். அவருக்கு வாழ்த்துகள்.
இங்கிருந்து எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வரிசையில், நம் திரைக் குடும்பத்திலிருந்து ஒருவர் முதல்வராகி இருக்கிறார். இது சினிமாக்காரர்கள் எல்லோருக்கும் பெருமையான விஷயம். தமிழகத்தில் எப்போதும் கலைத்துறையைச் சார்ந்திருக்கும்.
Advertisement
அண்ணா, கருணாநிதி என அனைவரும் நம் கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
அதேபோல விஜய் வந்ததிலும் சந்தோஷம், அதே நேரம் எதிர்பார்ப்பும் இருக்கும்.
சினிமாவில் இன்று பல பிரச்னைகள் இருக்கின்றன. திரையரங்குகள் யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றன? புதுப் படங்களை திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை என நிறையவற்றை நாம் கூறியுள்ளோம்.
இவை எல்லாவற்றுக்கும் விஜய்யின் ஆட்சி, ஒரு விடிவுகாலமாக அமைய வேண்டும்.
இன்று சினிமாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், டெக்னீசியன்கள், நடிகர்கள் என அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென்றால், ஒரு சுதந்திரம் வேண்டும். அந்த சுதந்திரம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
மற்றொரு கோரிக்கையாக, சினிமாவில் இந்தாண்டுக்கான மாநில விருதுகளை அடுத்தாண்டே கொடுக்கப்பட வேண்டும், 2026 விருதுகளை 2027-ல் கொடுத்து விடுங்கள். 2037-ல் கொடுக்க வேண்டாம். ஏனெனில், சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கொடுக்கும்போது, அவர்களே குழந்தையுடன் வருகிறார்கள்.
சினிமாவில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், எம்ஜிஆரும் கருணாநிதியும் அவற்றைக் கேட்டறிந்து தீர்த்து வைப்பர். அதன்பிறகு, சினிமாவை சிலர் கைவிட்டு விட்டனர். அதனால்தான், விருதுகள் தாமதமாகக் கிடைக்கிறது.
எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி மாதிரி விஜய்யும் சினிமாவை உங்கள் குடும்பம்போல நினைத்து, எங்கள் பிரச்னையை உடனேயே கேட்டறிந்து அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டும். உங்களை சினிமாவும் கைவிடாது, மக்களும் கைவிட மாட்டர்" என்று தெரிவித்தார்.