தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!
தாத்தா, பாட்டியைப் பேரன் கொன்று எரித்தது பற்றி...
மன்னார்குடி அருகே மதுபோதையில் தாத்தா, பாட்டியை அடித்துக் கொலை செய்து எரித்த பேரனை வியாழக்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த காரக்கோட்டை பகுதியில் வசிக்கும் கலியமூர்த்தி - தேவி தம்பதியரின் மகன் அய்யப்பன் (32). கலியமூர்த்தி தனது மனைவி, மகனை பிரிந்து நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார். தாய் தேவியுடன் வசித்து வந்த அய்யப்பன், மன்னார்குடியியில் உள்ள தனியார் ஷோரூமில் பணிபுரிந்து வருகிறார்.
வெளிநாட்டில் வசித்து வரும் கலியமூர்த்தி, காரக்கோட்டையில் தனியே வசித்து வந்த அவரது தந்தை பிச்சைமுத்து (80), தாய் சந்திரா (75) ஆகியோருக்கு மட்டும் பணம் அனுப்பிவந்ததாக கூறப்படுகிறது.
Advertisement
இதனால், அய்யப்பனுக்கும் அவரது தாத்தா பிச்சைமுத்துவுக்கும் பிரச்னை இருந்து வருவதாகவும், மேலும், மனஉளைச்சலில் அய்யப்பன் மதுபழக்கத்துக்கு அடிமையாகியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிச்சைமுத்து வீட்டுக்கு புதன்கிழமை மதுபோதையில் சென்ற அய்யப்பன், தூங்கிக் கொண்டிருந்த பிச்சைமுத்து மற்றும் சந்திராவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், இருவரும் சம்பவ இடத்திலே பலியாகினர். இதையடுத்து, வீட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 5 லிட்டர் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி இருவரையும் தீ வைத்து எரித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அதிகாலை போன் மூலம் தனது தாய்க்கு அய்யப்பன் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்றவர்கள் அய்யப்பனை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வடுவூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மன்னார்குடி டிஎஸ்பி மணிவண்ணன், வடுவூர் காவல் ஆய்வாளர் சுகந்தி ஆகியோர் இரண்டு சடலங்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மன்னார்குடி அரசு மருத்துமவனைக்கு அனுப்பிவைத்தனர்.
அய்யப்பன கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.