மன்னார்குடியில் 7 குடிசை வீடுகள் தீக்கிரை
மன்னார்குடி அருகே சவளக்காரனில் 7 குடிசை வீடுகள் வெள்ளிக்கிழமை தீக்கிரையானது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சவளக்காரனில் 7 குடிசை வீடுகள் வெள்ளிக்கிழமை தீக்கிரையானது.
சவளக்காரன் நடுத்தெருவில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. வெள்ளிக்கிழமை மதியம் சி.கலையரசி என்பவரது வீட்டின் கூரையில் முதலில் தீப்பற்றி மளமள என பரவி அடுத்தடுத்து இருந்த சி.மணிகண்டன், மு.தாமரைச்செல்வன், ஆர்.இந்திராணி, எஸ்.சுமதி, கே.செல்வராஜ், டி.கௌசல்யா ஆகிய 6 பேர்களின் குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது.
இதில், மொத்தம் 7 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமாயின. வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், வீட்டிலிருந்து எந்த பொருளையும் பாதுகாக்க முடியாததால் அனைத்து பொருள்களும் தீக்கிரையானது.
Advertisement
Advertisement
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த மன்னார்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மேலும் தீ பரவாமல் அணைத்தனர். தீவிபத்தில் சேதமடைந்த வீடுகளை, மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன், நாகை எம்பி வை.செல்வராஜ், மன்னார்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி 7 பேருக்கும் தலா ரூ.8 ஆயிரம் நிவாரணம் வழங்கினர்.
அப்போது, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் ஆர்.யோகோஸ்வரன், வட்டாட்சியர் நக்கீரன் உடனிருந்தனர். தீ விபத்து குறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து மேல் விசாரணை செய்கின்றனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.