மன்னார்குடி அருகே கார் மோதியதில் 3 அரசுப் பள்ளி மாணவர்கள் பலி!
கார் மோதி 3 அரசுப் பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது, கார் மோதியதில் 3 மாணவர்கள் வியாழக்கிழமை பலியாகினர்.
மன்னார்குடி, தஞ்சை பிரதான சாலையில் காரக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இதில், படிக்கும் மாணவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த காலனி தெரு முருகேசன் மகன் யோகேஸ்வரன் (12), வீரா காலனி முகேஷ் மகன் ரஷித் (12), இந்திரா காலனி ரமேஷ் மகன் ராஜமுரளி (12) ஆகிய மூன்று பேரும், வியாழக்கிழமை மாலை பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக பள்ளி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
Advertisement
Advertisement
அப்போது, அவ்வழியே மதுப்போதையில் கூத்தாநல்லூர் வட்டம் லட்சுமாங்குடி கலைஞர் காலனி குப்புசாமி மகன் உலகநாதன் (51) அதி வேகமாக ஓட்டி வந்த கார், 3 மாணவர்கள் மீது மோதியதில் காயமடைந்த ராஜமுரளி நிகழ்விடத்திலேயே பலியானார்.
மற்ற இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியாகினர்.
இது குறித்து, வடுவூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் உலகநாதனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.