முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் - விடியோ க்ளிப்
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இக்கோவிலுக்கு தமிழகத்திலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து நம்பெருமாளை தரிசனம் செய்வர். இக்கோவிலில் ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

Advertisement

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

அதன்படி, கடந்த மே 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின்போது. நம்பெருமாள் கருட வாகனம், யாளி வாகனம், யானை வாகனம், தங்கக் குதிரை வாகனம், பூந்தேர், கற்பக விருட்ச வாகனம் என தினசரி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் 9 ஆம் நாளான இன்று (மே 14) காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக நம்பெருமாள் அதிகாலை மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அளித்த வஸ்திரங்களை சாற்றியபடி புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பெரியதிருத்தேரில்; எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சரியாக காலை 6.00 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.

தேரானது 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து, பின்னர் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவார்.

இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை என பல மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

சித்திரை தேரின்போது, நம்பெருமாளை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், சகலதோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம் என்பதால் பெருந்திரளானோர் தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

மேலும் பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்வதற்காகவும், வடம்பிடித்து இழுத்துச் செல்லவும் போலீசாரால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

summary

Thousands participate in chariot procession at Srirangam temple during Chithirai Festival

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.