திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!
ஸ்ரீரங்கம் தொகுதியின் 91-வது வாக்குச்சாவடியில் திமுகவினரே அக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை எனத் தகவல்
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 14 நிர்வாகிகளை திமுக நியமித்த நிலையில், ஸ்ரீரங்கத்தில் ஒரு வாக்குச் சாவடியில் வெறும் 5 வாக்குகள் பதிவானதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவினரே அவர்களின் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்தம் 2,87,027 வாக்காளர்கள் உள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 2,55,293 பேர் வாக்களித்துள்ளனர். இந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் 1,03,235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும், திமுகவின் துரைராஜ் 69,645 வாக்குகளும், அதிமுகவின் மனோகரன் 65,819 வாக்குகளும் பெற்றனர்.
Advertisement
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள ஸ்ரீரங்கம் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 91 ஆவது வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளருக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், இளைஞரணி நிர்வாகி, மகளிரணி நிர்வாகி என தலா 14 பேரை நியமித்ததாக திமுக கூறும்நிலையில், 91 ஆவது வாக்குச்சாவடியில் அக்கட்சிக்கு வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதாவது, அவர்களின் கட்சியினரே அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று பொருளாகிறது.
இதுகுறித்து, திமுக நிர்வாகிகள் கூறியதாவது, கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களே வாக்களிக்கவில்லையா அல்லது வேறு ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.