தலைமைச் செயலகத்தில் விஜய்! தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள்!
ஆய்வுக் கூட்டங்களில் முதல்வர் விஜய் பங்கேற்று வருவது குறித்து...
முதல்வர் விஜய் இன்று(மே 14) காலை முதல் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
தமிழ்நாட்டின் புதிய முதல்வராக கடந்த ஞாயிறு அன்று பொறுப்பேற்ற முதல்வர் விஜய், முதல்வருக்கான கோப்புகளில் கையொப்பமிட்ட அவர், பணியைத் தொடங்கினார்.
அன்றே, தலைமைச் செயலகத்துக்குச் சென்று, தமிழக சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருள்கள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பது, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்தும் ஆலோசித்தார்.
Advertisement
இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது. 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசுக்கான பெரும்பான்மையை நிரூபித்தது.
இந்த நிலையில், முதல்வர் விஜய் இன்று(மே 14) காலை 10.15 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு சென்ற நிலையில், தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்று தமிழக அரசின் செயல்பாடுகளை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் எம். சாய் குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக், நிதித்துறை இணைச் செயலாளர் பிரத்திக் தாயள், துணைச் செயலாளர் சி.ஏ. ரிஷப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இன்று புதுமைப் பெண் திட்டத்தின் கீழும், மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழும் மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ. 1,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.