தலைமைச் செயலகத்தில் விஜய்! தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள்!
தலைமைச் செயலத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களில் முதல்வர் விஜய் பங்கேற்று வருவது குறித்து...
முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 14) காலைமுதல் தலைமைச் செயலகத்தில் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
தமிழ்நாட்டின் புதிய முதல்வராக கடந்த ஞாயிறு அன்று பொறுப்பேற்ற முதல்வர் விஜய், முதல்வருக்கான கோப்புகளில் கையொப்பமிட்டு, பணியைத் தொடங்கினார்.
அன்றே, தலைமைச் செயலகத்துக்குச் சென்று, தமிழக சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருள்கள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பது, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்தும் ஆலோசித்தார்.
Advertisement
Advertisement
இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது. 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசுக்கான பெரும்பான்மையை நிரூபித்தது.
இந்த நிலையில், முதல்வர் விஜய் இன்று(மே 14) காலை 10.15 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு சென்ற நிலையில், தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்று தமிழக அரசின் செயல்பாடுகளை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் எம். சாய் குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக், நிதித்துறை இணைச் செயலாளர் பிரத்திக் தாயள், துணைச் செயலாளர் சி.ஏ. ரிஷப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இன்று புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ. 1,000 வழக்கம் போல மாணாக்கர் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Chief Minister Vijay has been continuously participating in review meetings since this morning (May 14).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.