விமான நிலையம் போல மாறப்போகும் தாம்பரம் ரயில் நிலையம்! எப்படி?
விரைவில் பல்வேறு வசதிகளுடன் விமான நிலையம் போல தாம்பரம் ரயில் நிலையம் உருவாகி வருகிறது.
சென்னையை அடுத்துள்ள முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பயணிகள் வசதிக்காக பல்வேறு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
சென்னை நகரில் அதிக பயணிகள் வந்து செல்லும் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். இது வார இறுதி மற்றும் பண்டிகைக் காலங்களில் கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேல் அதிகரிக்கும்.
வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்குச் செல்லும் சில ரயில்கள் இங்கு நின்று செல்லும் என்பதால் எப்போதும் மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையமாகவும் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படாமல் இருந்தது.
Advertisement
ஆனால், தற்போது தாம்பரம் ரயில் நிலையம் புதுப்பொலிவு பெறப்போகிறது. அதாவது ரயில் நிலையத்தில் தற்போதுள்ள 10 பிளார்பார்ம்களையும் ஒன்றிணைக்கும் வகையில் 8 மீட்டர் அகலமுள்ள நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போதிருக்கும் நடைபாலமும் பயன்பாட்டில் இருக்கும் என்பதால் பயணிகளுக்கு அதிக வசதி ஏற்படும்.
மேலும் கூடுதலாக 9 மின்தூக்கிகள், பிளாட்பார்ம்களில் 10 நகரும் படிகட்டுகள் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்படவிருக்கின்றன. இப்பணிகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வரும் நிலையில், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ரயில் சேவை மற்றும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் உள்கட்டமைப்பு பணிகள் நடந்த வருகின்றன. இரவிலும் தொலைதூர ரயில்கள் இயக்கப்படுவதால், கட்டமைப்புப் பணிகள் சவாலாக இருப்பதாகவும் இங்கிருந்து சாலையை அடைய தனியாக மேம்பாலம் அமைக்கப்படும், வாகன நிறுத்துமிடம், ரயில் பெட்டிகள் பற்றிய வரைபடங்கள் இடம்பெறும் பகுதி என தாம்பரம் ரயில் நிலையமே விமான நிலையம் போல மிளிரப்போகிறதாம்.