விஸ்வரூபம் எடுக்கப்போகும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம்!
அலுவலகக் கட்டடங்கள், விற்பனை நிலையங்கள் என விஸ்வரூபம் எடுக்கப்போகும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் பற்றி..
சென்னையின் பல முக்கிய இடங்களுக்கு திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மிக எளிதாக சில நிமிடங்களில் சென்று விடலாம் என்பதைக் காட்டிலும், இனி அலுவலக சந்திப்பு, பொருள்களை வாங்க, உணவருந்த என பயணிகளின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உருவாகவிருக்கிறது.
3.85 ஏக்கர் பரப்பளவில், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டி ஒரு மிகப்பெரிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு, அலுவலகக் கூடங்கள், பல பொருள் விற்பனை நிலையங்கள், உணவகங்கள் என ஒரே தளத்தின் கீழ் அமையவிருக்கிறது. மெட்ரோ கட்டுமான இரண்டாம் திட்டத்தில், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்ட நான்கு கோபுர புதிய கட்டடங்கள் உருவாகவிருக்கிறது. இது அண்ணாநகர் மேற்கு பணிமனை அருகே கட்டப்படவிருக்கும் நிலையில் இங்கு 9 தளங்கள் வரை கட்டப்படலாம் என கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
பல ரயில் நிலையங்களில் அலுவலகக் கூடங்கள், விற்பனை நிலையங்கள் அனைத்தும், மெட்ரோ ரயில் நிலையித்தின் நுழைவு வாயில்கள், வெளியேறும் பகுதிக்கு அருகே அமைந்திருக்கும். ஆனால், திருமங்கலம் ரயில் நிலையத்தின் ஒரு பகுதியாகவே இந்த கட்டடங்கள் அமையவிருக்கின்றன.
உணவருந்த, பொருள்கள் வாங்க, பிறகு மெட்ரோ ரயிலில் ஏற, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறவே வேண்டாம். எல்லாம் ஒரே கட்டடத்துக்குள் சில தளங்களில் கிடைக்கும் வகையில் உருவாகவிருக்கிறது.
பயணிகள் டிக்கெட் கட்டணம் அல்லாத வருவாயை உயர்த்தும் வகையில் சென்னை மெட்ரோ இந்த புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறது.