தமிழ்நாட்டில் வாக்களிப்பு! வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 10 பேர் சிறையில் அடைப்பு!
வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற 10 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் வெளிநாடுகளில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு வந்து வாக்களித்துச் சென்றனர்.
இந்த நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வாக்களித்தபோது விரலில் வைக்கப்பட்ட மை அழியாத சிலர் வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் (பாஸ்போர்ட்) வந்த நிலையில், அவர்களிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
முதல்கட்ட விசாரணையில் வெளிநாட்டு வாழ் குடியுரிமை பெற்ற இவர்கள் சட்டவிரோதமாக தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்தது தெரியவந்தது. இதுபோன்று, சுமார் 10 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு மற்றும் சென்னை பெருநகர காவல் நிலையங்களில் கடந்த 07.05.2026 முதல் இன்று வரையில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை நாட்டைச் சேர்ந்த ரஞ்சினி, (59), சர்புதீன் (68), நிலந்தி (44), ஜெயந்தன் (40), சார்லி பாலச்சந்திரன் (48), சக்ரவர்த்தி லோகப்பிரியா, (50), சுனிதா சக்ரவர்த்தி (48), பிரிட்டனைச் சேர்ந்த அய்யாதுரை (53), இந்தோனேஷியாவைச் சேர்ந்த டிட்டின் மரியாட்டி (47), கனடா நாட்டைச் சேர்ந்த ஜித்தேந்திரநாத் (38) என 4 பெண்கள் உள்பட 10 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.