அமைச்சர்கள் நியமிக்கப்படாத துறைகள்!
தமிழ்நாட்டில் உயர்கல்வி உள்பட முக்கிய துறைகளுக்கு அமைச்சர் எவரும் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை.
தமிழ்நாட்டில் 9 அமைச்சர்களுக்கான துறைகள் இன்று ஒதுக்கப்பட்ட நிலையில் உயர்கல்வி உள்பட முக்கிய துறைகளுக்கு அமைச்சர் எவரும் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மை நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண்துறை, பால்வளம், மீன்வளம் & கால்நடைத்துறை, கைத்தறி & காதி, கூட்டுறவுத்துறை, வணிகவரி & பத்திரப்பதிவுத்துறை, போக்குவரத்துத்துறை, வீட்டுவசதித் துறை, உயர்கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுக்கு அமைச்சர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.
கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று தேர்தலின்போது தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். இதன்படி, தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 2 அமைச்சரவை ஒதுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அதேபோல எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணிக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றது. முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். பதவியேற்று 6 நாள்களாகியும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இன்று அமைச்சர்களுக்கான துறைகள் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆளுநர் அர்லேகரை முதல்வரின் தனிச் செயலர் செந்தில் குமார் சந்தித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு காவல், உள்துறை, பொது நிர்வாகம், மகளிர் மேம்பாடு, இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் விநியோகம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.