குதிரை பேரம் மூலமாக ஆட்சியைத் தக்கவைக்கும் தவெக அரசு! எஸ்.எஸ். சிவசங்கர்
திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் குற்றச்சாட்டு...
அதிமுக, அமமுக சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் குதிரை பேரத்தின் மூலமாக ஆதரவு பெற்று ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறினார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களுடன் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்,
"தவெக தலைவர் விஜய், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகும் மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் திமுக மீது அவதூறுகளைப் பரப்பி எதிர்க்கட்சித் தலைவரைப் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Advertisement
ஆளும் கட்சியான தவெக, சமூக ஊடகப் பிரசாரங்கள் வாயிலாக மக்களின் அனுதாபத்தைப் பெற முயற்சித்தது. தற்போது கூட்டணிக் கட்சிகள் அளித்த ஆதரவின் காரணமாக மட்டுமே இந்த அரசு நீடித்து வருகிறது.
தொடர் விமர்சனங்களும் அரசியல் ஆணவமும் நிர்வாகத்தை பலவீனப்படுத்தும். வெறும் அமைச்சராகிவிட்ட காரணத்தினால் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாடும் தன் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற தோரணையில் ஆதவ் அர்ஜுனா செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாடு என்பது யாருடைய தனிப்பட்ட வணிகப் பேரரசும் அல்ல. அரசியல் அதிகாரம் என்பது தற்காலிகமானது, நிலையற்றது, மாறிக்கொண்டே இருக்கக் கூடியது.
பாஜக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்பட, அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி வரக் கூடாது என்பதைத் தடுப்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை இந்த அரசு புறக்கணித்தால் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது" என்று கூறினார்.