அமைச்சரானார் முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் மகன்!
தனபால் மகன் அமைச்சராகப் பதவியேற்றது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ் செல்வன் அமைச்சராக பொறுப்பேற்றார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில், தவெக சார்பில் ராசிபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ் செல்வன் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
Advertisement
Advertisement
ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட லோகேஷ், பாஜக வேட்பாளர் பிரேம் குமாரை 14,511 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.
யார் இந்த லோகேஷ்?
அதிமுகவின் மூத்த நிர்வாகியும், பேரவையின் முன்னாள் தலைவருமான தனபாலின் மகன்தான் லோகேஷ் தமிழ் செல்வன்.
அதிமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகித்துவந்த லோகேஷ், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
தவெகவில் இணைந்தவுடன் லோகேஷுக்கு, ராசிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
லோகேஷ் தவெகவில் இணைந்தது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த தனபால், “கடந்த ஆறு மாதமாக எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். என்னை அதிமுக சார்பில் யாரும் வந்து பார்க்கவோ, விசாரிக்கவோ இல்லை. எனக்கு 1988ல், உடல்நிலை சரியில்லாமல் போனபோது, ஜெயலலிதா அவர்கள் நேரில் வந்து நலம் விசாரித்தார். தாயில்லாத நிலையை நான் இப்போது உணர்கிறேன்.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட நான் வாய்ப்பு கேட்டேன். ஆனால், எனக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. இதில் எனக்கு வருத்தம் இல்லை. என்னை வந்து பார்க்கவில்லையே என்பதுதான் வருத்தம் அளிக்கிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில்தான் என்னுடைய மகன் லோகேஷ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்” என்று தெரிவித்தார்.
1977, 1980,1984, 2001, 2011 உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற தனபால், 2016 மற்றும் 2021-ல் அவிநாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால், இந்த முறை அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Former Assembly Speaker Dhanapal's Son Becomes Minister!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.