பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோ
பெண் பாலியல் கொலை குற்றவாளிகளுக்கு மாநில அரசு, வாழ்நாள் சிறைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வைகோ தெரிவித்தார்.
பெண் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு, மாநில அரசு வாழ்நாள் சிறைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு குறித்த கேள்விக்கு, ஆட்சிக்கு வந்து சில நாள்கள்தான் ஆகிறது. அதற்குள்ளாக எதையும் கணிக்க முடியாது. ஆறு மாதம் செல்லட்டும். அதற்குப் பிறகுதான் இந்த அரசு எவ்விதம் இயங்குகிறது என்று கருத்துகளைத் தெரிவிக்க இயலும். சில நாள்களுக்குள் எந்த கருத்துகளையும் தெரிவிக்க இயலாது எனத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேசும்போது, ”இது மாதிரியான பெண் பாலியல் வன்கொடுமை கொலைகள் அடுத்தடுத்து எல்லாருடைய ஆட்சியிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிறுத்தப்படும் அந்த கயவர்களுக்கு நீதிமன்றங்கள், பிணை விடுதலை கொடுக்கவே கூடாது. சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது, பிணை விடுதலையில் வந்தவர்கள்தான் மீண்டும் பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்கிறார்கள். அவர்கள் எப்படி பிணையில் வந்தார்கள்? ஆகவே, நீதிமன்றங்கள் பிணை விடுதலை வழங்கவே கூடாது.
தமிழக அரசு ஒரு சட்டம் இயற்ற முன்வர வேண்டும். இதுமாதிரி பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமிகள் உள்பட பெண்களை படுபயங்கரமாக நாசமாக்கி கொலை செய்கின்ற கொடியவர்களுக்கு, 'வாழ்நாள் முழுவதும் சிறை' என்றுதான் தண்டனை இருக்க வேண்டும். ஆயுள் தண்டனை என்று கூறி பத்து வருடங்களில் விடுதலை செய்வதெல்லாம் இருக்கக் கூடாது. எனவே, வாழ்நாள் முழுவதும் சிறை என்ற சட்டத்தை மாநில அரசு இயற்ற வேண்டும். மத்திய அரசு இந்தச் சட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்.
இதன்மூலமாக மட்டுமே அச்சத்தை உண்டாக்க முடியும். அப்போதுதான், மனித சமுதாயத்தில் நடமாட தகுதியற்ற, விலங்கினும் கொடிய இதுமாதிரியான மிருகங்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்” என்று பேசினார்.