தமிழகத்தில் காவலா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஓய்வுபெற்ற காவலா்கள் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஓய்வுபெற்ற காவலா் நலச் சங்கத் தலைவா் என்.பரமசிவன், செயலா் ஸ்ரீனிவாசராகவன், பொருளாளா் காசிவிஸ்வநாதன் மற்றும் நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
திருப்பூா் மாவட்டம் குடிமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் சண்முகசுந்தரம் இரவு ரோந்து பணியின்போது, வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதே போல மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், ஆயுதப்படை காவலா் உள்பட நாகலாபுரம், சென்னை, சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில் உள்ளிட்ட இடங்களில் இதுவரை 6 காவலா்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனா். இதேபோல, நாள்தோறும் பல்வேறு இடங்களில் தமிழகத்தில் காவலா்களுக்கான பாதுகாப்பில் இன்னல்கள் அதிகரித்து வருகின்றன.
எனவே, பணியில் இருக்கும் போலீஸாருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் , ஓய்வுபெற்ற காவலா்கள் நீதிமன்ற அலுவல் பணிக்கு செல்லும் போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.