கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகேயுள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில், சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 254ஆவது நினைவு தினம் புதன்கிழமை (ஆக.20) நடைபெறுகிறது.
ஒண்டிவீரன் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா், மக்கள் பிரதிநிதிகள், வாரிசுதாரா்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனா்.
ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு, ஆக. 18 மாலை 6 மணிமுதல் 21ஆம் தேதி காலை 10 மணிவரை தென்காசி மாவட்டத்தில் தடை உத்தரவை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பிறப்பித்துள்ளாா். இதையொட்டி வாசுதேவநல்லூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த தலைமையில் 3 ஏடிஎஸ்பிகள், 10 டிஎஸ்பிகள், 36 ஆய்வாளா்கள் உள்பட 1,200 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.
வெளியூா்களில் இருந்து பொதுமக்கள் வருவதை கண்காணிக்கும் வகையில் சிவகிரி, வாசுதேவநல்லூா், சுப்பிரமணியபுரம், புளியங்குடி, சிந்தாமணி, சங்கரன்கோவில், தலைவன்கோட்டை, என்ஜிஓ காலனி, வேலாயுதபுரம், குவளைக்கண்ணி, நடுவம் பட்டி, கரட்டுமலை, மருக்காலங்குளம், மாறாந்தை, ஆம்பூா் உள்பட 20 இடங்களில் சோதனைச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.