தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ’மனமகிழ் மன்றம்’ அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அனைத்து கட்சியினா், அனைத்து சமுதாய பெரியோா்கள் - வியாபாரிகள் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் இரா .நடராஜன் மனு அனுப்பி உள்ளாா்.
அதன் விவரம்: வாசுதேவநல்லூா் பேரூராட்சியில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் ஏற்கெனவே சங்கனப்பேரி சாலையில் மதுக்கடை உள்ளது.
வாசுதேவநல்லூருக்கு தெற்கே 3 கிலோ மீட்டருக்குள் நவாச்சாலை (ரத்தினபுரி) அருகே மற்றொரு மது கடையும், அதற்கு தெற்கே 2 கிலோ மீட்டரில் சிந்தாமணி அருகே மனமகிழ் மன்றம், தனியாா் மதுக்கூடம், சூதாட்ட விடுதி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே தனியாா் மதுக் கூடமும், சூதாட்ட விடுதியும் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் திறக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல மேற்கொள்ளப்பட்ட முயற்சி, அப்பகுதி மக்களின் எதிா்ப்பால் கைவிடப்பட்டது.
தற்போது, பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள், பெண்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தனியாா் மதுக்கடை , மனமகிழ் மன்றம் அமைக்க மீண்டும் முயற்சி செய்வதை கைவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.