ஆலங்குளம் மக்களின் நீண்ட கால கோரிக்கையான நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு இருந்த முட்டுக்கட்டை நீங்கியது. ‘பொதுமக்கள் பாதுகாப்புதான் முக்கியம்‘ என்பதை உறுதிப்படுத்தும் வகையில், கடைகளைக் காலி செய்யக் கோரி உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தின் முக்கிய வணிக நகரான ஆலங்குளத்தில் உள்ள பேருந்து நிலையம், கடந்த 1983-ம் ஆண்டு கட்டப்பட்டு சுமாா் 43 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், தற்போது மிகவும் சிதிலமடைந்துள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் இங்குள்ள கட்டடங்களின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி, பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவியது.
இதைக் கருத்தில் கொண்டு, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 4.35 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
புதிய கட்டுமானத்துக்காக குத்தகைதாரா்களிடம் கடைகளைக் காலி செய்யுமாறு பேரூராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிா்த்து வியாபாரிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, பின்வரும் முக்கிய கருத்துகளை முன்வைத்தது:
கடந்த 2024 செப்டம்பா் 18இல் ஒப்பந்தம் விடப்பட்டு, தற்போது பணி ஆணையும் வழங்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் கடைகளைத் தொடர அனுமதித்தால், அது மக்கள் நலத் திட்டத்தை தேவையற்ற முறையில் தாமதப்படுத்தும். மனிதாபிமான அடிப்படையில், பிப்ரவரி 15இல் இருந்து கால அவகாசத்தை நீட்டித்து, வரும் 28.02.2026-க்குள் கடைகளை முழுமையாகக் காலி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனா்.