போடியில் சிசுவை கொலை செய்து புதைத்த பெண் சிறையிலடைப்பு
போடியில் ஆண் சிசுவை கொலை செய்த பெண் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
போடியில் ஆண் சிசுவை கொலை செய்த பெண் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, போடி வஞ்சி ஓடைத் தெருவில் சாக்கடையில் கிடந்த பிறந்து 2 தினங்களேயான ஆண் சிசுவை, நாய் தூக்கிச் சென்ற சம்பவம் குறித்து போடி டவுன் போலீஸார் வழக்குப் பதிந்தனர். பின்னர், போடி டவுன் இன்ஸ்பெக்டர் பாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சந்தேகத்தின்பேரில் அப்பகுதியில் உள்ள டீ கடை வைத்துள்ள முருகவேல் என்பவரை விசாரித்தனர். இவரது மகள் வீரலட்சுமி (22) என்பவர்தான் சிசுவை கொலை செய்தவர் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், வீரலட்சுமிக்கு கடந்த 2008 இல் கூடலூரைச் சேர்ந்தவருடன் திருமணம் நடைபெற்றதில், சிறிது காலத்திலேயே கணவர் இறந்துவிட்டாராம். அதன் பின்னர், 2011 இல் போடி முந்தலைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில், கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வீரலட்சுமி பெற்றோர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
Advertisement
இந்நிலையில், போடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதில், வீரலட்சுமி கருவுற்றதாகக் கூறப்படுகிறது. எனவே, கருவைக் கலைக்க முற்பட்டு முடியாமல் போனதால், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த வீரலட்சுமி, அக்குழந்தையை பாவாடை நாடாத் துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, வீட்டின் முன்பாக சாலையில் லேசாக குழி தோண்டி புதைத்துள்ளார். புதைத்த சிசுவை நாய் தூக்கிச் சென்றபோதுதான், சிசுக் கொலை வெளியே தெரியவந்தது.
வீரலட்சுமியை கைது செய்த போலீஸார், போடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவருடன் தொடர்பு வைத்திருந்த இளைஞர் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.