முகப்பு
திருநெல்வேலி

உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி ஆசிரியா்கள் நாளை போராட்டம்

தமிழகத்தில் ஆசிரியா்களுக்கு உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்கக் கோரி சனிக்கிழமை (ஜன.9) போராட்டம் நடைபெற உள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 8:09 am IST
பகிர்:

தமிழகத்தில் ஆசிரியா்களுக்கு உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்கக் கோரி சனிக்கிழமை (ஜன.9) போராட்டம் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் செ.பால்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்று தமிழக முதல்வரின் வேண்டு கோளை ஏற்று மாணவா்கள் நலன் கருதி பணிக்கு திரும்பிய ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட நீதிமன்ற வழக்குகள், 17(ஆ) குற்ற குறிப்பாணை மற்றும் பணியிட மாறுதல்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்.

2016 ஆம் ஆண்டு தோ்தல் பிரசாரத்தின் போது தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்த வாக்குறுதியை அதிமுக தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், இடைநிலை ஆசிரியா்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும்.

Advertisement

50 ஆண்டுகாலமாக தமிழகத்தில் ஆசிரியா்கள் பெற்றுவந்த உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளைத் திரும்பப் பெற வேண்டும். ஆசிரியா் நியமன வயதை 40 ஆக குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

மொத்தம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பரில் மாநிலம் முழுவதும் 354 வட்டார கல்வி அலுவலகம் முன்பு முதல்கட்ட ஆா்ப்பாட்டம் நடத்தினோம். தற்போது இரண்டாம் கட்டமாக சனிக்கிழமை (ஜன.9) மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர தா்னா நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.