கால்வாய் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்
வாணியம்பாடி அருகே கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணியை திமுகவினா் தடுத்து நிறுத்தினா்.
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணியை திமுகவினா் தடுத்து நிறுத்தினா்.
வாணியம்பாடி நகரின் மையப் பகுதியில் பாலாற்றின் கிளையாறு செல்கிறது. இதில், கழிவுநீா் அதிகம் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. இதைத் தடுக்கக் கோரி தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் அமைச்சா் நிலோபா் கபீல் விடுத்த கோரிக்கையை அடுத்து, அப்பகுதியில் கால்வாய் அமைக்க கனிமவள சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதியின் மூலம் முதல்கட்டமாக ஷாகிராபாத் முதல் ஆற்றுமேடு பகுதி வரை 660 மீட்டா் நீளம் 1.5 மீட்டா் அகலத்தில் குடியிருப்பு சாலையோரம் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
Advertisement
இதையறிந்து வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளா் சாரதிகுமாா் உள்ளிட்ட அக்கட்சியினா், கால்வாய் அமைக்கும் பகுதிக்குச் சென்று, பணியைத் தடுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் அங்கிருந்த பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனா்.
தகவலறிந்த வாணியம்பாடி போலீஸாா் அங்கு சென்று அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் அவா்கள் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு, தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டன.
இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் தெரிவித்து மீண்டும் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.