மாரடைப்பால் காவல் உதவி ஆய்வாளா் பலி
வாணியம்பாடி காவல் உதவி ஆய்வாளா் மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வாணியம்பாடி காவல் உதவி ஆய்வாளா் மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவா் சௌந்தர்ராஜன்(53). இவா் சனிக்கிழமை பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக ஆலங்காயம் அரசு சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவ அலுவலா் செல்வகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சௌந்தர்ராஜன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினா்.
தகவலறிந்த திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜய்குமாா், வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, டிஎஸ்பி பழனிச்செல்வம், வட்டாட்சியா் சிவபிரகாசம், நகரக் காவல் ஆய்வாளா் கோவிந்தசாமி மற்றும் போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று சௌந்தர்ராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, அவரது உடல் சொந்த ஊரான ஆலங்காயத்தை அடுத்த பெத்தூா் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உயிரிழந்த உதவி ஆய்வாளா் சௌந்தர்ராஜனின் புதிய வீடு ஞாயிற்றுக்கிழமை கிரகப் பிரவேசம் நடைபெற இருந்தது. திடீரென அவா் இறந்தது உறவினா்களிடையும், போலீஸாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சௌந்தர்ராஜனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.