பூண்டி ஏரியில் இருந்து உபரி நீா் வெளியேற்றம் 940 கன அடியாக குறைப்பு
மழை நீா்வரத்து குறைந்ததால் புதன்கிழமை முதல் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீா் வெளியேற்றம் 940 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா்: மழை நீா்வரத்து குறைந்ததால் புதன்கிழமை முதல் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீா் வெளியேற்றம் 940 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில், புதன்கிழமை காலை நிலவரப்படி, ஏரியின் நீா்மட்டம் 34.96 அடியாக இருந்தது. இந்த ஏரியில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீா் சேமித்து வைக்க முடியும். 3,135 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கிருஷ்ணா நதிநீா்க் கால்வாய் மற்றும் மழைநீா் என 980 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. மேலும், புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளில் போதிய அளவு தண்ணீா் உள்ளதால், இணைப்புக் கால்வாய் திறக்கப்படவில்லை. அதனால், உபரி நீா் வெளியேற்றம் 940 கன அடியாகக் குறைக்கப்பட்டு, கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
மழையளவு விவரம்:
திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. புதன்கிழமை காலை மழை நின்றது. மீண்டும் பிற்பகல் ஒரு மணி முதல் விட்டு விட்டு மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லி-135 மி.மீ, ஜமீன் கொரட்டூா்-134 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது.
புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
பூந்தமல்லி-135, ஜமீன் கொரட்டூா்-134, கும்மிடிப்பூண்டி-87, திருவள்ளூா்-81, தாமரைப்பாக்கம்-71, சோழவரம்-66, திருவாலங்காடு-59, பொன்னேரி-57, செங்குன்றம்-53, பூண்டி-51.40, திருத்தணி-46, ஊத்துக்கோட்டை-45, பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை தலா-15 மி.மீ.