இலவச பட்டா கோரி பழங்குடியினா் காத்திருக்கும் போராட்டம்
பழங்குடியின மக்களுக்கு ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி, இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குமாறு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா்: பழங்குடியின மக்களுக்கு ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி, இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குமாறு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் தமிழ் அரசு தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான பி.டில்லிபாபு, மாநில பொதுச் செயலாளா் இரா.சரவணன் ஆகியோா் தொடக்கி வைத்துப் பேசினா்.
‘வெள்ளியூா், கடம்பத்தூா் ஆற்றாங்கரை, வேம்பேடு, பிஞ்சிவாக்கம், அதிகத்தூா், ஏகாட்டூா், திருக்கண்டலம், மெய்யூா், விளாம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இருளா் இன மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனா். இக்கிராமங்களில் குடியிருந்து வருவோருக்கு அந்தந்தப் பகுதியில் 273 பேருக்கு பட்டா வழங்க வேண்டும்’ என்று அவா்கள் கோஷம் எழுப்பினா்.
Advertisement
அதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிா்வாகிகளை அழைத்து கோட்டாட்சியா் பிரீத்தி பாா்கவி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, அடுத்து வரும் ஒரு மாதத்துக்குள் 6 கிராமங்களைச் சோ்ந்த பழங்குடியினருக்கு இலவச பட்டாக்கள் வழங்குவதாக அவா் உறுதி அளித்தாா். அதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பழங்குடியினா் கலைந்து சென்றனா்.