முகப்பு
திருவாரூர்

அறுவடை இயந்திரம் தட்டுப்பாடின்றி கிடைக்க மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில், சம்பா அறுவடைப் பணிகள் தீவிரமடையவுள்ள நிலையில், அறுவடை இயந்திரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை

Updated On : 11 ஜனவரி, 2021 at 8:13 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில், சம்பா அறுவடைப் பணிகள் தீவிரமடையவுள்ள நிலையில், அறுவடை இயந்திரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் குறுகிய, மத்திய மற்றும் நீண்ட காலப் பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். இதில், சிஆா் 1009, பிபிடி, ஏடிடி, கோ 59 உள்ளிட்ட நெல் ரகங்கள் அறுவடைக்குத் தயாராக உள்ளன.

Advertisement

தற்போது பெய்து வரும் மழை காரணமாக, அறுவடைக்குத் தயாராக உள்ள வயல்களில் இயந்திரங்களை இறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் கோட்டூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல் சம்பா அறுவடை தொடங்கப்பட்டுள்ளது.

அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 2,800 வரை வாடகை கேட்கப்படுகிறது. ஓரிரு நாட்களில் மழை நின்று விட்டால் மாவட்டம் முழுவதும் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்து விடும்.

இந்த சூழலில் அறுவடை இயந்திரங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகளுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. இதனால், அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையும் அதிகரிக்கும். எனவே, குறைந்தபட்ச வாடகையுடனும், தட்டுப்பாடு இல்லாமல் அறுவடை இயந்திரங்கள் கிடைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.