எதிர்பார்ப்பில் பின்னலாடைத் தொழிலாளர்கள்
திருப்பூரில் பின்னலாடைத் துறை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் போனஸ்...
வணிகம்எதிர்பார்ப்பில் பின்னலாடைத் தொழிலாளர்கள்
திருப்பூரில் பின்னலாடைத் துறை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் போனஸ்...
திருப்பூரில் பின்னலாடைத் துறை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் போனஸ் வழங்கவில்லையெனில், வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்ற தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு சீராகச் சென்று கொண்டிருக்கும் உற்பத்தி வளர்ச்சியை சிக்கலுக்கு உள்ளாக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்தியாவில் பின்னலாடைத் துறையின் அடையாளமாக திருப்பூர் நகரம் திகழ்கிறது. சர்வதேச அளவில் இந்தத் துறையில் திருப்பூர் தனிக்கவனம் பெற்று, ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி வர்த்தக் ஏற்றுமதியைக் கொண்டதாகவும், ரூ. 15 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகத்தைக் கொண்டதாகவும் உள்ளது. இங்கு பின்னலாடை உற்பத்தியைப் பொருத்தவரை ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி மற்றும் அது சார்ந்த டையிங், நிட்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, காம்பாக்டிங் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 2 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் வெளிமாவட்டங்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 4 லட்சம் பேர் வரை இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகை குறித்த எதிர்பார்ப்பு பிற உற்பத்தித் துறைகளில் ஏற்படுகிறதோ இல்லையோ, திருப்பூர் பின்னலாடைத் துறையில் நிச்சயமாக அந்த எதிர்பார்ப்பு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே ஏற்பட்டு விடும். அதற்கு முக்கியக் காரணம் போனஸ்.
இங்கு, போனஸ் என்பது சுமார் ரூ. 500 கோடி பண விவகாரம் ஆகும்.
தொழிலாளர்கள் தங்களது பண்டிகைக் கொண்டாட்டத்தை திட்டமிட, சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக 20 நாள்களுக்கு முன்னதாகவே போனஸ் வழங்க வேண்டும் என்று திருப்பூர் தொழிற்சங்கத்தினர் சார்பில் தொழில்துறையினர் அனைவருக்கும் அக்டோபர் 3-ஆம் தேதி அறிக்கை மூலமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தீபாவளிக்கான இறுதிக்கட்ட ஆர்டர்களை முடித்துக் கொடுக்கும் முன்னர் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டால், அதையடுத்து, யாரும் வேலைக்கு வர மாட்டார்கள். இதனால் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய வரும் என்று தொழில் துறையினர் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதற்காகவே பல நிறுவனங்கள் பண்டிகைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாள்களுக்கு முன்னதாக போனஸ் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
வேலை நிறுத்தம்
தொழிலாளர்களுக்கு போனஸ் தொகையை முன்னதாகவே வழங்கக் கோரி திருப்பூரில் தற்போது போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 18-ஆம் தேதிக்குள் அனைத்துத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். இல்லையெனில், காலக்கெடுவுக்குள் போனஸ் கிடைக்கப் பெறாத தொழிலாளர்களுக்காக வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்படும் என்று சிஐடியூ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சிஐடியூ பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் கூறியதாவது:
போனஸ் சட்டப்படி, ஆண்டுதோறும் மார்ச் மாத நிறைவில் தொழிலாளர்களின் கணக்குகளைச் சரிபார்த்து போனஸ் வழங்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அது பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு வழங்கும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. தொழிலாளர்களுக்கு அடிப்படை போனஸ் 8.33% வழங்க வேண்டும். இது, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.
திருப்பூரில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக நாங்கள் 30% வரை போனஸ் வழங்க வலியுறுத்தி வருகிறோம். தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, எவ்வித இழுபறியும், தாமதமும் இல்லாமல் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலான போனûஸ வரும் 18-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
அவ்வாறு போனஸ் வழங்காதபட்சத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்காக அனைவரையும் ஒருங்கிணைத்து வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.
ஆனால், அத்தகைய சூழல் ஏற்படாது என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம். இதுகுறித்து அவர் கூறுகையில், "தொழில் துறையினர் மற்றும் தொழிலாளர்கள் இணக்கமாக செல்லும் சூழலே இங்குள்ளது. தொழில் துறையின் தற்போதைய நிலையில் வளர்ச்சியை பாதிக்கும் விஷயமாக போனஸ் விவகாரம் உருவெடுக்காது. இணக்கமான சூழலில் இடர்பாடுகள் வர வாய்ப்பில்லை' என்றார்.