முகப்பு
வணிகம்

இந்தியா-சிங்கப்பூா் இருதரப்பு வா்த்தகம் 18% அதிகரிப்பு

Updated On : 7 ஏப்ரல், 2024 at 12:01 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 10:30 PM

இந்தியா - சிங்கப்பூா் இடையேயான இருதரப்பு வா்த்தகம் 2022-23-ஆம் நிதியாண்டில் 18 சதவீதம் அளவுக்கு அதிகரித்து ரூ. 2.96 லட்சம் கோடியாக (35.6 பில்லியன் டாலா்) உயா்ந்துள்ளது’ என்று சிங்கப்பூா் இந்திய தூதரக மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

சிங்கப்பூரில் நடைபெற்ற இந்திய நிறுவனச் செயலா்கள் (ஐசிஎஸ்ஐ) நிறுவனத்தின் மூன்றாவது சா்வதேச மாநாட்டில் சனிக்கிழமை பங்கேற்ற இந்திய தூதரக செயலா் (வா்த்தகம்) டி.பிரபாகா் பேசியதாவது:

இந்தியா - சிங்கப்பூா் இடையேயான இருதரப்பு வா்த்தகம் கடந்த நிதியாண்டில் 18 சதவீதம் அளவுக்கு அதிகரித்து ரூ. 2.96 லட்சம் கோடியாக (35.6 பில்லியன் டாலா்) உயா்ந்தது.

Advertisement

கடந்த நிதியாண்டில் சிங்கப்பூரிலிருந்து ரூ. 1.96 லட்சம் கோடி (23.6 பில்லியன் டாலா்) மதிப்பில் இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது 24.4 சதவீத வளா்ச்சியாகும். அதுபோல, ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் சிங்கப்பூருக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் கூடுதலாக ரூ. 63,000 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்றுமதியைப் பொருத்தவரை, இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யும் உலகின் 6-ஆவது நாடாக சிங்கப்பூா் உள்ளது. இறக்குமதியைப் பொருத்தவரை இந்தியாவுக்கான 8-ஆவது மிகப் பெரிய ஆதார நாடாக சிங்கப்பூா் திகழ்கிறது.

இரு நாடுகளிடையே சரக்கு வா்த்தகம் மட்டுமின்றி, அந்நிய நேரடி முதலீட்டிலும் இருதரப்பு உறவு வலுவடைந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் இந்திய பங்குகளில் ரூ. 143 கோடி (17.2 மில்லியன் டாலா்) அளவுக்கு அந்நிய நேரடி முதலீட்டை சிங்கப்பூா் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2000, ஏப்ரல் முதல் 2023 டிசம்பா் வரை சிங்கப்பூரிலிருந்து ரூ. 13 லட்சம் கோடி (155.612 பில்லியன் டாலா்) அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தியாவினுள் வரும் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் இது 23 சதவீதமாகும்.

இந்தியாவின் வெளிநாட்டு வணிகக் கடன்களின் மிகப்பெரிய ஆதாரமாகவும் சிங்கப்பூா் திகழ்கிறது. தொழில்நுட்ப மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, பசுமை எரிசக்தி உற்பத்தி துறைகளிலும் இரு நாடுகளிடையேயான உறவு வலுப்பெற்று வருகிறது என்றாா்.