தேர்தல் அலை ஓய்ந்தது; மீண்டெழுந்த பங்குச் சந்தை!
பாஜக ஆட்சி அமைக்கும் நிலையில் பங்குச் சந்தை மீண்டது!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க கோரியுள்ள நிலையில் தேர்தல் முடிவுகளையொட்டி ஏற்பட்ட சரிவிலிருந்து பங்குச் சந்தை குறியீடுகள் புதன்கிழமை மீண்டுள்ளன.
வங்கிகள், ஆட்டோமொபைல் மற்றும் எஃப்எம்ஜிசி நிறுவனங்களின் பங்குகள் மூலதனம் ஒரே செஷனில் ரூ.12 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகள் நிச்சயமின்மையால் ரூ.30 லட்சம் கோடி சரிந்தது.
சென்செக்ஸ் 3.2 சதவிகிதம் அல்லது 2,303 புள்ளிகள் உயர்ந்து 74,382 என்றவிலும் நிப்டி 3.36 சதவிகிதம் அல்லது 735 புள்ளிகள் உயர்ந்து 22,620 என்றளவிலும் முடிவடைந்துள்ளன.
வங்கி நிப்டி 2,126 புள்ளிகள் வரை உயர்ந்து 49,054 என்றளவில் முடிவடைந்தது.
தற்போதைய சந்தை சூழலில் முதலீட்டாளர்கள் குறுகிய கால மற்றும் வேக பங்குகளில் முதலீடு செய்வதில் கவனத்தோடு இருக்க வேண்டும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மக்களவை தேர்தலையடுத்து ஏற்ற இறக்கத்தை சந்தித்த பங்குச்சந்தை புதிய அரசு உருவாக்கத்தால் நிலை கொண்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் உலக வங்கிகளின் நிலையை பங்குச் சந்தை விழிப்புடன் கண்காணிக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தை மாற்றங்களுக்கு தேசிய ஜனநாயக் கூட்டணியின் எதிர்கால அரசுக் கொள்கைகள் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.