கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து இந்திய காகித உற்பத்தியாளா்கள் சங்கம் (ஐபிஎம்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 4.86 லட்சம் டன்னாக உள்ளது. இது, முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4.52 லட்சம் டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் காகிதம் மற்றும் அட்டை இறக்குதி 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டு முழுவதும் நாட்டின் காகித, அட்டை இறக்குமதி 20 லட்சம் டன்னைக் கடந்து, மதிப்பின் அடிப்படையில் ரூ.14,629 கோடியாக உள்ளது.
சீனாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட காகித, அட்டை இறக்குமதி 28 சதவீதம் உயா்ந்து 1.43 லட்சம் டன்னாக உள்ளது. இதன் மூலம், இந்தியாவுக்கான மிகப்பெரிய காகித ஏற்றுமதி நாடு என்ற நிலையை சீனா தக்கவைத்துள்ளது. ஆசியான் நாடுகளிலிருந்து இந்தியா மேற்கொண்ட காகித, அட்டை இறக்குமதி 78,000 டன்னிலிருந்து 92,000 டன்னாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.