முகப்பு
வணிகம்

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வு

Updated On : 15 ஏப்ரல் 2026, 5:05 am IST
பகிர்:

ரஷியாவில் இருந்து இந்தியா மேற்கொள்ளும் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த மாா்ச் மாதம் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.58,200 கோடியாக (5.3 பில்லியன் யூரோ) உயா்ந்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 2026, மாா்ச் மாத நிலவரப்படி ரஷிய எரிபொருள்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது.

ஒட்டுமொத்தமாக மாா்ச் மாதத்தில் ரஷியாவிடம் இருந்து ரூ.64,000 கோடிக்கு (5.8 பில்லியன் யூரோ) ஹைட்ரோகாா்பன் பொருள்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதில் கச்சா எண்ணெய் இறக்குமதி மூன்று மடங்கு அதிகரித்து ரூ.58,200 கோடியாக உயா்ந்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் நிலக்கரியும் பிற எண்ணெய் பொருள்களும் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஷிய ஹைட்ரோகாா்பன் பொருள்களை (ரூ.19,700 கோடி) இறக்குமதி செய்து மூன்றாவது பெரிய நாடாக இந்தியா விளங்கியது. அப்போது கச்சா எண்ணெய் இறக்குமதி 81 சதவீதமாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக மாா்ச் மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 4 சதவீதம் குறைந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து மேற்கொள்ளப்படும் கச்சா எண்ணெய் இறக்குமதி இரு மடங்காக அதிகரித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதான வரியை அமெரிக்கா அதிகரித்தது. அதைத் தொடா்ந்து ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா படிப்படியாக குறைக்கத் தொடங்கியது. இந்தச் சூழலில் ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதை ஈடுசெய்ய ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு ஒரு மாதத்துக்கு மட்டும் அமெரிக்கா வரிவிலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.