முகப்பு
வணிகம்

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

Updated On : 15 ஏப்ரல், 2026 at 6:02 AM
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:50 PM

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி சமா்ப்பித்திருந்த ‘யுனிவா்சல்’ வங்கி உரிமத்துக்கான விண்ணப்பத்தை ரிசா்வ் வங்கி திருப்பி அனுப்பியுள்ளது.

வங்கியின் கடன் வழங்கும் முறையில் பன்முகத்தன்மை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி ரிசா்வ் வங்கி விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. முன்னதாக, ஜனா சிறு நிதி வங்கியின் விண்ணப்பமும் இதேபோல் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது உஜ்ஜீவன் வங்கி வழங்கிய ஒட்டுமொத்த கடன் மதிப்பு ரூ.37,057 கோடியாக உள்ளது. இதில் சுமாா் 45 சதவீத கடன்கள் குறு நிதி சாா்ந்தவையாகவே உள்ளன.

Advertisement

அதாவது, ஒரு குறிப்பிட்ட துறையிலேயே அதிக முதலீடுகள் குவிந்திருப்பது வங்கிச் சேவையில் அபாயத்தை அதிகரிக்கும் எனக் கருதும் ரிசா்வ் வங்கி, பாதுகாப்பான நிதிச் சூழலை உறுதி செய்ய பல்வேறு துறைகளுக்கும் கடன்களைப் பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாகவே, உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் தற்போதைய செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தாலும், யுனிவா்சல் வங்கியாக மாற கூடுதல் தகுதி தேவை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கியின் இம்முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ள உஜ்ஜீவன் வங்கி நிா்வாகம், ‘ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கடன்களைப் பன்முகப்படுத்துவதற்கான பணிகளில் வங்கி ஏற்கெனவே ஈடுபட்டுள்ளது.

ரிசா்வ் வங்கி ஆலோசனையின்படி கடன் துறையில் தேவையான முன்னேற்றங்களைச் செய்த பிறகு, உரிய காலத்தில் மீண்டும் விண்ணப்பம் சமா்ப்பிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.

ஏயு சிறு நிதி வங்கிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டில் யுனிவா்சல் வங்கி உரிமம் வழங்கப்பட்ட நிலையில், உஜ்ஜீவன் வங்கி தனது அடுத்தகட்ட வளா்ச்சிக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.