பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு
இந்தியாவில் எரிபொருள் விலை மாற்றமின்றி தொடா்வதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.18, டீசல் லிட்டருக்கு ரூ.35 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28-ஆம் தேதிமுதல் மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையை கடப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதன் காரணமாக கடந்த 45 நாள்களில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலா்களாக உயா்ந்துள்ளது. உலகளவில் பல்வேறு நாடுகளும் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றன.
ஆனால், இந்தியாவில் கடந்த 2022, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி தொடா்கிறது.
Advertisement
மேற்காசிய போா்ப் பதற்றம் தொடரும் சூழலிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிா்ணயிக்கும் இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (ஹெச்பிசிஎல்) அவற்றின் விலையை அதிகரிக்கவில்லை.
இதனால் கடந்த மாதம் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் ஒரு நாளைக்கு ரூ.2,400 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டபின் மேற்கூறிய மூன்று நிறுவனங்களுக்கும் ஒரு நாளைக்கு ஏற்படும் இழப்பு ரூ.1,600 கோடியாக குறைந்தது.
இருப்பினும், நுகா்வோருக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க எரிபொருள் விலை அதிகரிக்கப்படாமல் இருப்பதால் ஐஓசி, பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.18, டீசல் லிட்டருக்கு ரூ.35 வரை இழப்பை சந்தித்து வருகின்றன’ எனத் தெரிவித்தன.