மும்பை: டிரம்பின் கட்டணக் கொள்கைக்கு எதிரான அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உள்நாட்டு சந்தைகள் இன்று வெகுவாக வரவேற்றன.
அமெரிக்க உச்ச நீதிமன்றம், டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான வரிகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்களின் மனநிலை மேம்பட்டதால், பொதுத்துறை வங்கி, ஆட்டோ மற்றும் நிதிப் பங்குகள் உயர்ந்து, பங்குச் சந்தை அளவுகோல் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்தன.
இருப்பினும், அமெரிக்க அதிபர் கிட்டத்தட்ட அனைத்து இறக்குமதிகள் மீதான தற்காலிக உலகளாவிய கட்டணங்களை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து வர்த்தகத்தின் நடுப்பகுதியில் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தனர்.
தொடக்க வர்த்தகத்தில், சென்செக்ஸ் 671.44 புள்ளிகள் உயர்ந்து 83,486.15 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்ந்து 83,294.66 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 141.75 புள்ளிகள் உயர்ந்து 25,713 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் அதானி போர்ட்ஸ் 2.98 சதவீதம் உயர்ந்ன. அதைத் தொடர்ந்து கோடக் மஹிந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், பவர் கிரிட், இந்துஸ்தான் யூனிலீவர், எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டைட்டன், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டிரென்ட், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐ.டி.சி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், எடர்னல், டாடா ஸ்டீல் மற்றும் இண்டிகோ ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் அதானி போர்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, எச்டிஎஃப்சி லைஃப், நெஸ்லே உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் ஹிண்டால்கோ, விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, சிப்லா ஆகிய பங்குகள் சரிந்தன.
தகவல் தொழில்நுட்பத் துறை 1.4 சதவீதம், உலோகம் 0.2 சதவீதம் சரிந்தன. அதே நேரத்தில் பொதுத்துறை வங்கி குறியீடு 1.3 சதவீதம் உயர்ந்த நிலையில் மருந்து, எண்ணெய் & எரிவாயு, உள்கட்டமைப்பு, எஃப்எம்சிஜி, ஆட்டோ ஆகியவை தலா 0.5 சதவீதம் உயர்ந்தன.
துறை ரீதியாக ஐடி குறியீடு அழுத்தத்தை எதிர்கொண்ட நிலையில் முதலீட்டாளர்கள் வங்கிகள், மின்சாரம், எஃப்எம்சிஜி மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பங்குகள் மீது ஆர்வத்தை காட்டினர்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி சுமார் ரூ.590 கோடி அளவில் கணக்குகளில் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்ததையடுத்து அதன் பங்குகள் 16% சரிந்தன. 77 லட்சம் பங்குகள், ப்ளாக் டீல் மூலம் கோஹான்ஸ் லைஃப் சயின்சஸ் பங்குகள் வர்த்தகமானதால் அதன் பங்குகள் 3% அதிகரித்தன.
ஹாங்காங்கின் ஹேங் செங் 2.53 சதவீதமும், தென் கொரியாவின் கோஸ்பி கிட்டத்தட்ட 1 சதவீதம் உயர்ந்தன. விடுமுறை நாட்கள் காரணமாக ஜப்பான் மற்றும் சீனாவின் பிரதான சந்தைகள் மூடப்பட்டிருந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.38 சதவீதம் சரிந்து 71.49 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.