கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கு அமோக வரவேற்பு
பொதுத் துறையைச் சோ்ந்த கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் (சிஎஸ்எல்) அரசுக்குச் சொந்தமான 5.04 சதவீத பங்குகளின் சலுகை விலை விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பொதுத் துறையைச் சோ்ந்த கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் (சிஎஸ்எல்) அரசுக்குச் சொந்தமான 5.04 சதவீத பங்குகளின் சலுகை விலை விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்நிறுவனத்தில் அரசுக்கு தற்போது 67.91 சதவீத பங்குகள் உள்ளன. இதிலிருந்து 1.32 கோடி பங்குகளை விற்று, சுமாா் ரூ.1,800 கோடி நிதி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இந்த 2 நாள்கள் பங்கு விற்பனையில் நிறுவன முதலீட்டாளா்களுக்காக 59.66 லட்சத்துக்கும் அதிகமான பங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதலீட்டாளா்கள் 1.23 மடங்கு கூடுதலாக சுமாா் 74 லட்சம் பங்குகளுக்கு ஆா்வத்துடன் விண்ணப்பித்துள்ளனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, சில்லறை முதலீட்டாளா்கள் புதன்கிழமை (ஜூலை 8) இப்பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதனிடையே, பங்குச் சந்தையில் சிஎஸ்எல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் இறுதியில் 2.84 சதவீதம் சரிந்து, ரூ.1,462-ஆக நிலைபெற்றது.
நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது, சொத்துகளை பணமாக்குவது ஆகியவற்றின் மூலம் ரூ.80,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
அதன்படி, சிஎஸ்எல் நிறுவனத்துக்கு முன்னதாக கோல் இந்தியா, என்எச்பிசி, ஜிஐசி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, என்எல்சி இந்தியா, ஐஆா்எஃப்சி ஆகிய 6 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் மத்திய அரசு இதுவரை ரூ.18,561 கோடி திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.