பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,953 புள்ளிகள் சரிவு! காரணம் என்ன?
இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது பற்றி...
இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை காலை கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருகின்றது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 1,953.21 புள்ளிகள் சரிந்து 74,750.92 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. 2.55 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது.
மேலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 580.05 புள்ளிகள் சரிந்து 23,197.75 புள்ளிகளாக வர்த்தகத்தை தொடங்கியது.
காலை 10.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 75,045.97 புள்ளிகளில் வர்த்தகமாகும் நிலையில், ரிலையன்ஸ், பவர்கிரிட் நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.
நிஃப்டியிலும் ஐடி, வங்கி, பார்மா உள்ளிட்ட துறைகளின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.
காரணம் என்ன?
இந்த வாரத்தின் முதல் மூன்று நாள்கள் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தைகள், மேற்காசிய நாடுகள் போர்ப் பதற்றம் காரணமாக இன்று சரிவை சந்தித்துள்ளன.
கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 9 நாடுகளின் எரிபொருள் உற்பத்தி மையங்களை குறிவைத்து ஈரான் நேற்றிரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி உற்பத்தி ஆலையில் தீப்பற்றி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், வளைகுடா நாடுகள் எரிபொருள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
இதன்காரணமாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 110 டாலரைக் கடந்துள்ளது.
இந்த நிலையில், சர்வதேச அளவில் இன்று பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.