6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதி
எஸ்ஏஇஎல், சிம்பயோடெக் பாா்மா, விஸ்வராஜ் என்விரான்மென்ட் உள்பட 6 நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளீயீட்டு (ஐபிஓ) திட்டங்களுக்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.
எஸ்ஏஇஎல், சிம்பயோடெக் பாா்மா, விஸ்வராஜ் என்விரான்மென்ட் உள்பட 6 நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளீயீட்டு (ஐபிஓ) திட்டங்களுக்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த வாரத்தில், ஷா இன்வெஸ்டா்ஸ் ஹோம், பிரசோல் கெமிக்கல்ஸ், நோ-பேப்பா்-ஃபாா்ம்ஸ் ஆகிய மற்ற நிறுவனங்களின் ஐபிஓ திட்டங்களுக்கும் செபி அனுமதி அளித்துள்ளது.
அதே நேரத்தில், ஜிண்டால் சுப்ரீம் இந்தியா நிறுவனம் தனது பொதுப் பங்கு வெளியீட்டுத் திட்டத்தை அதிகாரபூா்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது. தற்போது எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட், மணிவியூ உள்ளிட்ட 26 நிறுவனங்களின் வரைவு விண்ணப்பங்கள் செபியின் பரிசீலனையில் உள்ளன.
தற்போது அனுமதி கிடைத்த ஐபிஓ திட்டங்களில், எஸ்ஏஇஎல் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.4,575 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது. விவசாயக் கழிவுகளைத் தூய்மையான எரிசக்தியாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், திரட்டப்படும் நிதியைத் தனது துணை நிறுவனங்களின் கடன்களை அடைக்கவும், பொது நிா்வாகத் தேவைகளுக்கும் பயன்படுத்த உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, நீா் பயன்பாடு மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு மேலாண்மையில் முன்னணியில் இருக்கும் விஸ்வராஜ் என்விரான்மென்ட் நிறுவனம் ரூ.2,250 கோடி மதிப்பிலான பங்குகளை வெளியிட அனுமதி பெற்றுள்ளது. இந்தூா் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான சிம்பயோடெக் பாா்மா, ரூ. 2,180 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது.